Wednesday, October 10, 2012

வாகையூர் ஆறுமுகம் பெரியப்பா....,



ஆறுமுகம் பெரியப்பா....,
எப்போதும் உழைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சராசரி உழவர்.காலையில் எழுந்து ,ஆடு, மாடுகளுக்கு,தண்ணீர் வைத்து அவற்றை வேற்று இடத்தில பிடித்துக்கட்டி என்று இவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு போகும் வரை தேவையான வற்றை செய்துக்கொண்டு இருப்பார்.இவருக்கு தெரியாத வேலை என்று எதுவும் இருந்தது இல்லை.வயலுக்கு சென்றுவிட்டால்,உழுவது முதல்,வாய்க்கால்,வரப்பு செத்துவது வரை எல்லாவேலையையும் செய்வர்.வண்டி மாடு இப்போது இல்லை.
மோட்டர் வண்டி உழவு,எருவுக்கு பதில் செயற்கை உரம் என்று விவசாயத்தின் முகம் மாறிவிட்டது.எப்படித்தான் விவசாயத்தின் முகம் மாறினாலும்,காலம்,காலமாக ஒரு உழவனாக வாழ்ந்தவருக்கு தமக்கு தெரிந்த வேலைகளை விட்டு விடமுடியவில்லை.தென்னை மட்டையில் இருந்து கீற்று பின்னுவது,பனைமட்டை ஓலை கொண்டு கூரை மேய்வது,வைக்கோல் கொண்டு கயிறு திரிப்பது என்று எல்லாவற்றிலும்,தம் கைவண்ணத்தை காட்டிவிடுவார்.தேசிய ஊரக வேலைதிட்டத்தை,ஏரி வேலை என்று சொல்லும் பெரியப்பா,இப்போது அந்த வேலைக்கு சென்று வருகிறார்.இப்போது ஊருக்கு சென்றிருந்த போது  ஊரக வேலைதிட்டத்தை,முடித்துக்கொண்டு வந்தவர் வரும் போது ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை எடுத்து வந்திருந்தார்.
அவற்றை கொண்டு வெட்டியதை அள்ளும் கூடை என்பதால்,வெட்டிக்கூடை
என்று அழைக்கப்படும் என்று நினைக்கிறேன்,அதை செய்துகொண்டு இருந்தார்.

இதனையே தட்டையாக செய்தால் ''தட்டுக்கூடை''என்று அழைக்கப்படும்.இப்போது இதற்கு  பதில் அலுமினிய கூடை,பிளாஸ்டிக் கூடைகள் வந்துவிட்டன.இந்த  ''அழிஞ்சி'' மரத்தின் சிறுகிளைகளை உடனடியாக கொண்டு கூடைகள் முடையலாம்.இவை காய்ந்து விட்டால் அவற்றை ஊறவைத்து பின்னர் முடையலாம்.உழவுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் திறமைகொண்டவர்.மண்வெட்டிக்கு கைப்பிடி செய்தல்,அரிவாளுக்கு கூர் தீட்டுதல் என அனைத்தும் தெரிந்தவர்.எப்போதும் அலுக்காமல் வேலை செய்துக்கொண்டே இருப்பவருக்கு, இதுவரை சக்கரை,மூட்டு வலி,குருதி கொதிப்பு என்று எதுவும் இல்லாத நிறைவானவர்.பேரபிள்ளைகளுக்கு விளையாட்டு பொருள்கள் செய்து கொடுத்து அவர்களை வியக்கச் செய்பவர்.

 ஒரு உழவராக இருக்க,வாழ பல வேலைகள் தெரிந்து இருக்கவேண்டி இருக்கிறது.உழவர்களின் உழைப்பை பெற எதுவும் தெரிந்து இருக்க தேவை இல்லை இந்த சமுகத்திற்கு.பணத்தை மட்டுமே வைத்திருந்ததால் போதுமானது என்று நினைக்கிறது.ஆனால் அவர்களைப்போல்,ஒரு உழவனைப்போல் ஒரு நாளேனும் மண்ணோடும்,மனிதர்களோடும் நெருக்கமாக,பிணைப்புடன்  வாழ முடியுமா....என்று தெரியவில்லை ?. 
 


Friday, September 28, 2012

இனிப்பான இலுப்பை ....... பசுமை விகடன் 25/09/2012


ஒரு காலத்தில் கோயிலும், இலுப்பைத் தோப்புகளும் இல்லாத ஊர்களையே பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்குத் தேடினாலும் கிடைக்காது எனும் அளவுக்கு... அற்றுப் போய்விட்டன, இலுப்பை மரங்கள். இதற்கு நடுவே பாரம்பரியத்தைக் கைவிடாமல், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில கிராமங்களில் மட்டும் இன்றைக்கும் இலுப்பை வனங்களைப் பராமரித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், ராமநத்தம் கிராமமும் அதில் ஒன்ற
ு. இங்கே கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில், இலுப்பை மரங்களை ஊர் பொதுவில் பராமரித்து வருகின்றனர் மக்கள்!

உச்சிவெயில் உச்சந்தலையில் இறங்கும் மதியவேளையில், அந்த இலுப்பை வனத்துக்குள் நுழைந்தோம். அங்கே நமக்காகக் காத்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ''இங்க 100 வருஷத்துக்கு மேல இந்த இலுப்பைத் தோப்பைக் காப்பாத்திட்டு வர்றோம். வெள்ளக்காரங்க ஆட்சியில 1918-ம் வருஷம், வெள்ளாத்தாங்கரைக்கு பக்கத்துல இருக்கற வெலிங்டன் (எமன் ஏரி) ஏரிக்கு தண்ணீர் கொண்டுபோக, வாய்க்கால் வெட்டினாங்க. அப்ப இந்த இலுப்பைத் தோப்பு அழிஞ்சுடக் கூடாதுனு எங்க பகுதியைச் சேர்ந்த பலரும் தங்களோட சொந்த நிலத்தைக் கொடுத்து, வாய்க்கால் வெட்டிக்கச் சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகு, 1950-ம் வருஷம் வாக்குல கண்ணன்ங்கிறவர் கூடுதலா இலுப்பைக் கன்னுங்களை நட்டு... ஆடு, மாடுக கடிக்காம காப்பாத்தி இந்த தோப்பை இன்னும் பெரிசாக்கியிருக்கார். அவரோட, நினைவா தோப்போட ஒரு பகுதியை 'கண்ணுத் தோப்பு'னுதான் எல்லாரும் கூப்பிடறோம். இதெல்லாம்தான் இன்னிவரைக்கும் எங்க ஊர் மக்களுக்கு இலுப்பைத் தோப்பு மேல தனிப்பாசத்தை உருவாக்கி வெச்சுருக்கு'' என்று உருகி உருகிச் சொன்னார்.


உணவாகும் இலுப்பைப் பூ !

கூடவே நின்றிருந்த ரெங்கராஜ், ''இந்த நிலம் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் மரங்களை கோயில் தர்மகர்த்தாதான் நிர்வகித்து வருகிறார். மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும். ஊரில் உள்ளவர்கள், கொட்டைகளைப் பொறுக்கி கோயிலில் கொடுப்பார்கள். அதற்கு உரிய சம்பளம், கொட்டைகளாவே கொடுக்கப்படும். வருஷத்துக்கு ஒருமுறை மரத்துக்கு 100 கிலோ அளவுக்கு கொட்டை கிடைக்கும். பொறுக்குக் கூலியாகக் கொடுத்தது போக, மீதியிருக்கும் கொட்டைகளை எண்ணெய் ஆட்டி, ஊர்ல இருக்கும் ஐந்து கோயிலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பூக்கொட்டும்போது, இலைகளைக் கூட்டி ஓரமா தள்ளி வைத்துவிட்டு, தரமான பூக்களைச் சேகரித்து உணவு மற்றும் மருந்துக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்று சொன்னார்.     


                                   


களைப்பைப் போக்கும் களிசட்டிக்காய் !

அடுத்தாக, ''இலுப்பைத் தொட்டி கட்டினா... தாய்மார்களுக்கு பால் நல்லா சுரக்கும்னு சொல்வாங்க'' என்று இலுப்பையின் பெருமை பேசிய செல்லம்மா, ''சீசன்ல... காலையிலயும், சாய்ந்தரமும் கொட்டை பொறுக்க போவோம். கூலியா கிடைக்கற கொட்டைகளை எண்ணெய் வியாபாரிகக்கிட்ட கொடுத்துட்டு, அவர்கிட்ட இருந்து எண்ணெய் வாங்கிக்குவோம். நாலுபடி கொட்டைகளைக் கொடுத்தா... ஒரு படி எண்ணெய் கொடுப்பார். அந்த எண்ணெயில பலகாரம் செய்றது, விளக்கு எரிக்கறது, குழம்பு தாளிக்கறதுனு எல்லாத்துக்கும் பயன்படுத்துவோம். இலுப்பை எண்ணெயில சமைச்சா மணமாவும், சுவையாவும் இருக்கும்.

பூ சீசன்ல, கொட்டுற பூவையெல்லாம் பொறுக்கிட்டு வந்து, அதுகூட உப்பு, புளி, மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வறுத்து அரைச்சு, சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வெச்சுடுவோம். இந்த உருண்டைகளை களிசட்டிகாய்னு சொல்லுவோம். வயக்காட்டுல வேலை பார்க்குறப்ப, இதுல ரெண்டு உருண்டைய தின்னுட்டு தண்ணியைக் குடிச்சுட்டு வேலையைப் பார்த்தா... களைப்பு இல்லாம இருக்கும். இந்த உருண்டை, பிள்ளைங்களுக்கு நல்ல தின்பண்டமாவும் இருக்கும். குளிக்கறப்ப இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி தலையில தேய்ச்சு குளிப்போம். பேன், பொடுகுத் தொல்லையே இல்லாம ஓடிப்போயிடும்'' என்று சொன்னார்.

தலைமுறைகளைத் தாண்டிய பலன் ! 



இலுப்பைத் தோப்புகள் பற்றி ஆய்வுகள் செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ரமேசு கருப்பையா, ''முன்னோர்கள், இலுப்பைத் தோப்பை உருவாக்கியதற்கு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன. பொது இடங்களில் மரங்களை உருவாக்க நினைத்தவர்கள் மா, பலா, தென்னை, தேக்கு, ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தலைமுறை கடந்தும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இலுப்பைத் தோப்புகளை, தாங்கள் குடியேறிய பகுதிகளில் உருவாக்கி இருக்கின்றனர்.

மண்ணெண்ணெய், மின்சாரம் ஆகியவை பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே இலுப்பைத் தோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் எண்ணெயை விளக்கெரிக்க முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். பூவை சர்க்கரை எடுப்பதற்கும், சாராயம் காய்ச்சுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிண்ணாக்கை நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாறு நுழையும் இடத்தில இருந்து விருத்தாசலம் வரை, சுமார் ஐம்பது கிலோமீட்டருக்கு ஆற்றின் இரண்டு பக்கமும் இலுப்பை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை சில ஊர்களில் முற்றாக அழித்து விட்டனர்.

இந்தப் பழங்களை நம்பி, அரிய உயிரினமான பழந்திண்ணி வெளவால் இருக்கிறது. இம்மரங்கள் மழைக்காலத்தில் பழங்களைத் தருவதால், பழந்திண்ணி வெளவால் இனம், இலுப்பைத் தோப்புகளில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. இலுப்பை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், பழந்திண்ணி வெளவால் இனமும் அழிக்கப்பட்டு விடும். இந்த மரம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக, இதன் கன்றுகளை பலருக்கும் நான் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்'' என்றார் உற்சாகமாக!

இலுப்பையைக் காக்கும் இந்த கிராமத்துக்கு பசுமை வணக்கம் !

--------------------------------------------------------------------------------

முழுக்க முழுக்க மருந்து!

இலுப்பையின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய இதேபகுதியில் இருக்கும் பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் வரதராஜன், ''முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைஞ்ச மரங்கள்ல இலுப்பைக்கு முக்கிய இடமிருக்கு. இலுப்பைப் பூவுல குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதனால நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவங்க, இலுப்பை எண்ணெயில சமைச்ச உணவை சாப்பிடும்போது, பக்கவிளைவு இருக்காது. சித்த மருந்து தயாரிப்புல, கூட்டுப்பொருளா இந்த எண்ணெயைப் பயன்படுத்தறாங்க. இலுப்பை வேர், நாள்பட்ட ஆறாதப் புண், பசி இல்லாமை, காய்ச்சல், தேகச் சோர்வு இதுக்கெல்லாம் நல்ல மருந்து. இலுப்பைப் பிண்ணாக்குல புகைபோட்டா, கொசு பிரச்னை இருக்காது. மேலும், இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி குளியலுக்குப் பயன்படுத்தலாம். சேற்றுப்புண், விரை வீக்கம் இதுக்கெல்லாம் மருந்தாவும் பயன்படுத்தலாம்'' என்று சொன்னார்.........

Monday, September 3, 2012

ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான். .



                            


                            
படம்-இடம் வாகையூர் கிராமம்.31-08-2012.


ஆடி மாசம்,மழை பெய்ஞ்சா விதைக்கலாம்னு காத்திருந்த பெரியாப்பா,மழை வராதது கண்டு வெறுத்து போனார்.இருந்தாலும் ஒரு தூறல் விழுந்த மறுநாள்,கலப்பைய பூட்டினார்.ஒரு அடி உழவு ஓட்டி,எருவை கலைச்சு விட்டால்,அடுத்து 
ஒரு நல்ல மழை பேயும் நாளில் விதைத்தால் மட்டும் போதும், பயிறு நல்ல கிளம்பும் ,என்று காட்டுக்கு போனார்.எல்லா வேலையும் முடிச்சு வரும் வேளையில் ஒரு பட்டு போன ''நுணா'' மரத்தின் வேரை கிளற அங்கே மண்ணையும்,மரத்தையும் அறிச்சபடி கரையான் கிடந்துச்சி.....அட என கொஞ்சம் மண்ணோடு,கரையன்களையும் அள்ளிவந்து கோழி குஞ்சுகளுக்கு போட்டார்.
அத தான் கோழி குஞ்சுக கொத்தி கொத்தி தின்னுதுக.மழை வர்ற வரை மத்த வேலைகள பாக்க வேண்டியதுதான்.

நாம climate change,Global warming ன்னு பேசிக்கிட்டு Facebooka கிழ்ச்சிகிட்டு இருக்கலாம்.
ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.
ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான்.
 

Monday, August 27, 2012

ஆன்மாவை அறுவடை செய்தபின்...





ஏரிப்பாசனத்தில் ஏகமாய் விளையும் நிலம்

இந்த மழையற்ற நாளிலும் 


வற்றாத கிணறு


எல்லாவிதத்திலும் உழவுக்கு ஏற்ற நிலம் 



அதனாலென்ன 



இதுவரை கதிர் விளைந்த நிலத்தில்



கட்டிடம் விளைய போகிறது




ஆன்மாவை அறுவடை 
செய்தபின்...









                   



''தக்கோலம்'' ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் .........



தக்கோலம்.இது வரலாறு கடந்து போன பாதையில் அமைந்திருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று.  இராட்டிரகூடர்களும்,சோழர்களும் போர்க்களம் கண்ட பகுதி.காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் இடையே அமைந்திருக்கிறது   தக்கோலம். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தன் பெயரில் ஒரு வரலாறை தாங்கி தங்கியிருக்கும் ஊர். 
இன்றும் நமக்கு அருகில் இருக்கிறது என்ற ஆவலில் ஒரு நாள் 
பயணமானோம்.அந்த ஊர் போகும் வரை அந்த ஊரை பற்றி சில பிம்பங்கள் இருந்ததது.ஆனால் அந்த ஊரில் வரலாற்று தடயமாக எதையும் நம்மால் காண முடியவில்லை.பெரும்பான்மையோரிடமிருந்து நமக்கான பதிலை,அடையாளங்களை தேடி பெற முடியவில்லை.இறுதியாக ஒரு ஓய்வு பெற்ற  ஆசிரியரிடமிருந்து மட்டுமே பதில் கிடைத்தது.கல்லும்,மணலும் கொண்ட மேட்டு பகுதி இருந்தது,அதுவும் இப்போது விவசாய நிலமாக மாறிவிட்டது என்றார்.பழமையான ஜலனாதீஸ் வரர் கோவிலை மட்டுமே பார்த்து வர முடிந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போர் நடந்த இடத்தில் இன்று ஒன்றும் இருக்க வாய்ப்பிலாவிட்டலும்,ஆயிரமாண்டுகள் அகவையுடைய ஊரினை,வரலாறில் எழுத்துக்களாய் படித்த ஊரை பார்த்த ஒரு மகிழ்வில் திரும்பினோம்.

கொஞ்சம் வரலாறு..........

தக்கோலப் பெரும் போர் கி.பி. 949ஆம் வருடம் வேலூர் மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்யர் தலைமையிலானமுதலாம் பராந்தக சோழரின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின.   மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில்  சோழ இளவரசர் இராஜாதித்யர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.



                                                 

Friday, August 24, 2012

இலுப்பை இலைப் படுக்கை!.................



இலுப்பை இலைப் படுக்கை!



யற்கையைக் காப்பதற்காக 'மழை - மண் - மரம் - மானுடம்’ என்ற அமைப்பை தனி ஒருவராய் நிறுவி தமிழகம் முழுதும் களப் பணியில் இயங்கிவருகிறார் இரமேசு கருப்பையா. இவர், தான் பிறந்து வளர்ந்த ஊரான ராமநத்தம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
’’கடலூர் மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் கடைக்கோடிக் கிராமம்தான் எங்கள் ஊர். சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிக்குச் செல்லும்போது, நீங்கள் எங்கள் ஊரைக் கடந்துதான் செல்ல முடியும். இங்கு இருக்கும் அழகான வெள்ளாற்றங்கரையின் வடகரையில்தான் எங்கள் ஊர் உள்ளது. வடகரையில் கடலூர் மாவட்டம், தென்கரையில் பெரம்பலூர் மாவட்டம் அமைந்து இருப்பது இதன்  சிறப்பு. ராமர் இந்த ஊரின் வழியாக சென்றதால்தான் ராமநத்தம் என்று பெயர் வந்தது என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. ஆனால், இந்தப் பெயரை தமிழ்ச் சொல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் நீர்ப் பிடிப்பும் நிலப்பிடிப்பும் உள்ள பகுதி என்று அர்த்தம் தெரியவந்தது.

புதிதாக நாம் குடியேறும் இடத்துக்கு அண்ணா நகர், பெரியார் நகர் என்று நாம் இன்று வைத்துக்கொண்டது போல இங்கு, குடியேறிய மக்கள் நத்தம் என்ற பெயருக்கு முன்னால் ராமன் என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே காலப்போக்கில் 'ராமநத்தம்’ ஆகிவிட்டது.
எங்கள் ஊரின் பெயர் ராமநத்தம் என்றாலும் தொழுதூர் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். ஏனெனில், இங்கு இருந்து மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தொழுதூர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஊராக இருந்தது. ஊரின் மேற்குப் பக்கம் மழை பெய்தால் மட்டுமே, எங்கள் ஊரின் வெள்ளாற்றில் தண்ணீர் ஓடும். மற்ற நேரங்களில் இருக்காது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது அதில் அடித்துக்கொண்டுவரும் வைக்கோல் போர், தென்னை, பனை மரங்கள் போன்றவற்றை வேடிக்கை பார்ப்பதில் எங்களுக்கு  அலாதி இன்பம்.  ஆற்றுப் பாலத்துக்கு அடியில் இருக்கும் நீர்த் தேக்கத்தின் வாய்க்கால்களில்தான் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் குளிப்போம்.  நீச்சல் பயிற்சியை விளையாட்டாகவே அனுபவித்த அந்தப் பருவங்கள் அழகானவை.

என்னுடைய இரண்டாவது கருப்பை என்று என் ஊரில் உள்ள இலுப்பைத் தோப்பைச் சொல்லலாம். உள்நோக்கும் முகமாக என்னை நானே பார்த்துக்கொண்டதும் என் சிந்தனைகளைக் கிளை பரப்பி வளர்த்துக் கொண்டதும் இங்குதான்.  சுமார் 150 மரங்களைக்கொண்ட இந்தத் தோப்பு வெள்ளாற்றங்கரையில் பசுமையையும் குளுமையையும் ஒருசேர அள்ளித்தரும். தேர்வுக் காலத்தில் எங்களின் படிப்பிடமும் இங்குதான். காலையில் எழுந்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வோம். படித்துக் களைப்பாகிவிட்டால் சருகுகளாகக் கிடக்கும் இலுப்பை இலைகளைப் பரப்பி படுக்கையைத் தயார் செய்து படுத்துவிடுவோம்.
தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் ஆற்றுக்குச் சென்று கைகளால் மணலைத் தோண்டினால் ஊற்று நீர் பொங்கி வரும். அந்தத் தண்ணீரைக் குடிப்போம். அமைதியான சூழலில் படிக்கவும் தூங்கவுமாக எங்கள் பால்யத்தைப் பசுமையாக வைத்து இருந்த இலுப்பைத் தோப்பு என் தாத்தாவுக்குச் சொந்தமானது. இங்கு இருக்கும் மரங்களின் வேர் முடிச்சுகள் என் தாத்தாவின் கைரேகைகள். எனக்குள் இயற்கை ஆர்வத்தை விதைத்தது இந்த இலுப்பைத் தோப்புதான். இப்போதும் ஊருக்கு வந்தால், காலையில் கண் விழிக்கும் இடம் இதுதான்.


அப்போது மோட்டல் என்று சொல்லக் கூடிய 'வழி உணவகம்’ முதன்முதலில் எங்கள் ஊரில்தான் ஆரம்பித்தார்கள். சாலையோர உணவு விடுதிகளை முதன்முதலில் பார்த்தபோது அதிசயத்துப்போனேன்.  இந்த  உணவு விடுதிகளால்தான் தொழுதூர்- ராமநத்தம் என்று  ஊர் இருப்பதே பலருக்குத் தெரியவந்தது.
எங்கள் மக்கள் நெல், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாலையில் கொட்டித்தான் நெற்கதிர் அடிப்பார்கள். ஆனால், இப்போது நொடிக்கு ஒரு வாகனம்  கடந்து செல்வதால், சாலையைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக எங்கள் ஊரில் இப்போது வந்து குடியேறிக் கொண்டு இருக்கிறார்கள். இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றிவிட்டார்கள். சாலையின் இருபுறமும் இருந்த புளியமரங்களை அழித்துவிட்டு சாலையின் நடுவில் செடிகள் நடுகிறது நம் அரசு. இந்த முரண்பாடுதான் என்னை முள்ளாய்த் தைக்கிறது. என் பால்யத்தில் புளிய மரங்களில் தொத்தித் திரிந்த குரங்குகள் இப்போது என்னவாயின என்றே தெரியவில்லை. புளிய மரத்தினை நம்பி வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று அழிந்துவிட்டன.
எங்கள் ஊரில்  வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம். அதனால், பிழைப்பைத்தேடி வெளிநாடு செல்பவர்கள் இங்கு அதிகம். இங்கு எட்டாவது படிக்கும் ஒவ்வொரு மாணவனும் வெளிநாட்டுக் கனவில்தான் படிக்கிறான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குறைந்தது பத்து பேராவது இங்கு இருந்து வெளிநாடு கிளம்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம் அல்ல... விவசாயம் செத்துவிட்டது என்று அர்த்தம்!
சந்திப்பு: ஜெ.முருகன்
படங்கள்: தேவராஜன்

Friday, August 17, 2012

குயிலின் குரல் இலக்கியமானது...........

               
பெரும்பாவலர் 'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' யாவரும் அறிந்ததே.இதை புதுவையில் இருக்கும் பொது தான் இயற்றினார்.ஒரு படைப்பு உருவாவதற்கு சூழல் பெரும்பங்கு ஆற்றுகிறது.அது நமது பாவலரின் படைப்புக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.    'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' உருவானதே குயில் தோப்பில் தான்.
அந்த குயில் தோப்பு,புதுவையின் புறப்பகுதியாக இருந்த கருவடிக்குப்பம் ஆகும்.தற்போது கிழக்கு கடற்கரை சாலை (புறவழிச் சாலையில்) உள்ளது.இப்போது அங்கே குயில் தோப்பு இல்லை.சித்தர்; சுவாமி சித்தானந்தா சுவாமிகளின் வளாகத்தில் தான் முன்னர் குயில் தோப்பு இருந்தது.இப்போது பாரதியார் இயற்றிய அவ்விடத்திற்கு நினைவாக ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது.அங்கே சுவாமி சித்தானந்தா சுவாமி களை வழிபட வருபவர்கள்,எத்தனை பேருக்கு இது தெரியும் என தெரியவில்லை.

   அன்று  குயில்கள் இருந்தன,தோப்பு இருந்தது.ஒரே வகையான மரங்களின் தொகுப்பிற்குத்தான் தோப்பு என்று மரங்களின் பெயர் வரும்.
  பறவைகளின் பெயரில் தோப்பு அமைந்திருக்குமானால்,அன்று அது எத்தகைய தோப்பாக இருந்திருக்கும்.
 அது பாரதியை வரவேற்றிருக்கிறது.தன் பெயரில் கவி பாட'' வைத்திருக்கிறது.இன்று குயில் தோப்பும் இல்லை .குயில்களும் இல்லை.
 பெரும் குரலில் பாடிய பாரதியும் இல்லை.ஆனாலும் குயில் பாட்டு,தமிழின் குரலாக ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.  
குயிலின் குரல் இலக்கியமானது........... 

வெள்ளை எருக்கு....


                                
எருக்கஞ் செடிகளை  நாம் பரவலாக எல்லா இடத்திலும் பார்க்க கூடும்.ஆனால் அவை எல்லாம் நீல வண்ண மலர்களை கொண்டதாக இருக்கும்.வெள்ளை நிறத்தில் பூக்க கூடிய ''வெள்-எருக்கினை''
பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று.இதனை ''திருமாற்பேறு'' என்னும் ஊரில் கோவிலுக்கு வெளியே பார்க்க முடிந்தது.இந்த வெள் எருக்கு மலர்கள் கொண்டுதான் கடவுளர்களுக்கு மாலைகள் செய்வார்களாம்.இதன் மருத்துவ பலன்கள் முழுமையாக பயன்படுதப்பட்டாதா என்று தெரியவில்லை.நீல வண்ண மலர்களை போல்,இது 
எளிதாக கிடைப்பதில்லை என அறிகிறோம்.இல்லை இது அழிந்து வருகிறதா என தெரிய வில்லை.வழக்கம் போல அழிந்தபின் வருந்துவோம்.இல்லை யாரோ ஒரு அமெரிக்ககாரன் ''பட்டா'' போட்டு ''பதிவு செய்து ,பயன்படுத்தகூடாது என்று  சொன்னால் மட்டுமே பொங்கி அழுவோம்.

 
                                                                                         

காக்காவுக்கு சோறு வச்சிங்களே,தண்ணீர் வச்சிங்களா......''பாப்பா கேட்ட காக்க கேள்வி'.


''பாப்பா கேட்ட காக்க கேள்வி'
                                       
ஏதோ ஒரு பண்டிகை நாள்.அன்று ஊருக்கு செல்லாமல் சென்னையிலயே தங்கி விட்ட நண்பர்களை நண்பகல் விருந்துக்கு அழைத்து இருந்தார் நண்பர்.அவருக்கு சென்னையே பிறப்பிடம்.சென்றிருந்த நண்பர்களில் ஒருவர் குழந்தையோடு வந்திருந்தார்.எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம்.உள்ளே ''படையல்'' வேலை நடந்து கொண்டிருந்தது.எல்லாம் முடிந்த பின்னர்,சாப்பிடுவதற்கு அமர்ந்தோம்.இலை போட்டு தண்ணீர் வைத்தாகிவிட்டது .
அந்த வீட்டை சேர்ந்த நண்பரின் அம்மா,எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தாச்சு,காக்காவுக்கு சோறு வைக்கலையே என்றார்.அட.. டா.. என்ற படி,அந்த வீட்டு நண்பர்,கொஞ்சம் சோறு எடுத்துக்கொண்டு  வீட்டின் மாடிக்கு சென்று விட்டார் .பின்னர் வந்தவர் ,அப்பாடா..நல்ல வேளை நாம் சாப்பிடுமுன் காக்காவுக்கு சோறு வச்சாச்சு என்றார்.
அப்போது அந்த குழந்தை கேட்டது,
காக்காவுக்கு நீங்க சோறு வச்சிங்களே , தண்ணீர் வச்சிங்களா....?என்று ...எல்லோருக்கும் அது புதுமையாகவும்,மழலைத்தனமாகவும் இருந்ததை ரசித்தனர்.உண்மையில் 
அதில் நடைமுறை உண்மை இருந்தததை உணர முடிந்தது.

நாம் என்றாவது இது குறித்து யோசித்தது உண்டா?சோறு வைக்கும் நாம் ஏன் தண்ணீர் வைப்பதில்லை?இந்த ''கட்டிட காட்டினில்''நதியை தேடி எங்க போகும்.
அப்போது தான் நினைவுக்கு வந்தது. நண்பர் ''சதீஷ் முத்து கோபால்'' சிட்டு குருவிக்கு தண்ணீர் வையுங்கள்.கம்பு தானியங்களை  தூவுங்கள் என்றபடி அறிவுறுத்திவருவார்.அதை எப்படி அவர் தனது வீட்டில் செய்து வருகிறார் என்பது பற்றியும் புகைப்படம் இட்டு வருவார்.ஆமாம் இப்போது நாம் யாரும் சிறு தானியங்களை பயிர் இடுவதில்லை.அப்போது அதன் உணவை தான் அதற்கு இடவேண்டும்.
அப்படி இருக்கையில் காக்காவுக்கு ஏன் சோறிட வேண்டும்.மத நம்பிக்கையின் படி முன்னோர்கள் காக்கையின் வடிவில் வந்து உண்பதாக நம்பினார்கள்.அதை தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக பட்டது. (இல்லாமலும் இருக்கலாம்) காக்கை,கழுகு ஆகியவற்றை  ''ஆகாயத் துப்புரவாளர்கள் ''என்று அழைப்பது உண்டு.ஏன் என்றால் 
இவை பெரும்பாலும் இறந்த உயிரினங்களை  உண்டு நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பெரும்பங்கு வைக்கிறது.இப்போது காக்கையை அழைப்பதன் நோக்கம் இதற்காகவும் இருக்கலாமா என்று எண்ண தோன்றுகிறது.

எது எப்படியோ ''பாப்பா கேட்ட காக்க கேள்வி'' நல்ல செயலை நோக்கி தள்ளியது.இனி காக்காவுக்கு சோறு வைக்கும் போது,இல்லை என்றானாலும்  தண்ணியாவது வைப்போம் எப்போதும்.    
         

Thursday, August 16, 2012

அலிப்பூர்,கான்பூர் .....திருமால்பூர்.



                                          

காஞ்சிபுரத்திலிருந்து ,அரக்கோணம் செல்லும் பாதையில் நண்பரோடு இருசக்கர பயணமாக சென்று கொண்டிருந்தோம்.நல்ல தமிழ் தாங்கிய பெயர் பலகைகளே கண்ணில் பட்டுக்கொண்டு வந்தது.ஒரு பெயர் பலகை ''திருமால்பூர்'' என்று கண்ணில் பட்டது.வட நாட்டில் பல ஊர் பெயர்களுக்கு அலிப்பூர்,கான்பூர் .  ''பூர்'' என்று முடிவதுண்டு.தமிழில் 'ஊர்'
என்றுதான் பெரும்பான்மை முடியும்.இப்படியாக பேசிக்கொண்டு செல்லும் போது,  ''ஊர்'' என்று மட்டுமே முடியவேண்டுமனால் ,திருப்பூரில் எப்படி ''பூர்'' என்று வந்தது என்றார் நண்பர்.ஆமாம் எப்படி வந்தது ..என்று பேசிக்கொண்டே கடந்தோம்.ஆனால் அந்தப்பேச்சை எங்களால் கடக்க முடியவில்லை.திடீரென்று நண்பரே சொன்னார் .யாராவது நம்மாளுங்க  
 'ராஜ்கபூர்,அனில் கபூர்'' என்று வடநாடு ரசிகசிகாமணிகள் யாராவது இந்த வேலையை செய்திருப்பார்கள் என்றார்.நடுவணரசு  புகைவண்டி பலகையிலும் அப்படியே இருந்தது.பொதுப்பணித்துறை 'திருமால்பூர்'ஏரி..என்றே குறிப்பிட்டு இருந்தது.
நாம் சென்ற வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.அட வாப்பா..இங்கிருந்து மூன்று கல் தொலைவு தான் சென்று பார்த்து விட்டு,திருமால் கோவிலையும் பார்த்து விட்டு வரலாம் என்றார்.சரி ''இவ்வளவு தூரம் வண்டி  விட்டோம்,இன்னும் கொஞ்சம் விடுவோம்'' என்று வண்டியை செலுத்தினோம்.  
அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது ..அந்த ஊரின் பெயர் ''திருமாற்பேறு'' ..அதாவது , திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.அதுதான் ''திருமாற்பேறு''-திருமால்பூர் என்று மாற்றிவிட்டான் தமிழன்.
அட விடப்பா..பேர் பெற்ற நம்ம தமிழன் யாரோ ''பார்'' மயக்கத்துல ''பேறு'' என்பதை ''பூர்''என்று எழுதிவிட்டான்.நல்ல வேளை அவன் திருமால் ''போர்''என்று எழுதாமல் விட்டானே என்று ''பொறுமல்''மூச்சு விட்டோம்.
                       
  

Friday, August 3, 2012

அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........Peace Pagodas.

                                      
இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதையே,சிறப்பாக நினைத்து வந்த அந்த இளமை கால வாழ்க்கையில் இருந்து விலகியே நின்றார்,Nichidatsu Fujii [1885-1985]
குருஜி என்று அழைக்கப்பட்ட இந்த வழிகாட்டி.
தீவீ ரமான துறவு வாழ்க்கையை பின்பற்றிவந்தவர் இவர் .
நாடுகளை கைப்பற்றி அடிமைபடுத்த முயன்று வரும் வேளையில்
தமது பாதை அமைதியை நடைமுறை படுத்துவதே என்று நடை பயில தொடங்கினர்.இவரது பாதை அமைதி பயணங்களே.கையில் ஒரு சிறிய பறையை தட்டிக்கொண்டே அமைதிக்கான வார்த்தைகளை ஒலித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.1931 இல் இந்தியா  வந்த இவர் காந்தியின் ,போராட்ட முறை பிடித்துப்போனதால் இந்தியாவோடு மிகுந்த நெருக்கம் காட்டினர்.தாம் சார்ந்து வாழும் புத்த மதமும் இந்தியாவில் தோன்றியது என்பதும் கூடுதலான ஈடுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.

அப்போது உலகையே போர் மேகங்கள் சூழ்ந்து,முதலாம் உலகப்போரும்,இரண்டாம் உலகப்போரும் உலுக்கி வந்தது.இதன் இறுதி கோர முகமாக
ஹிரோஷிமா,நாகசாகியில் ''அணு ஆயுதங்கள் '' தங்கள் அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டின.மனித சமூகத்தின் கொடும் முகத்தினை கண்டு உலகம் அதிர் உற்றது போன்றே தானும் அதிர்வுற்று நின்றார்.
உலகம் முழுக்க அமைதியை வலியுறுத்தி நினைவகங்கள் உருவாக்க,மதம், இனம் ,மொழி, நாடு கடந்து மக்கள் ஒன்று கூட ஒரு இடம் உருவாக்கினர்.இவர் தோற்றுவித்த புத்த வாழ்க்கை முறையின் பெயர் ஜப்பான் புத்த அமைப்பாகும்.(Buddhist religious order, Nipponzan Myohoji)




       


               

அவைதான் இந்த அமைதி நினைவகங்கள்.இவை உலகம முழுக்க இன்று கட்டப்பட்டு வரப்படுகிறது.
இவை முதன் முதலில் கட்டப்பட்டது ஹிரோஷிமா,நாகசாகியில் தான்.இந்த கட்டிடங்கள் இந்தியாவில் உள்ள ''சாஞ்சி'' புத்த நினைவிடத்தை போன்ற கட்டிட அமைப்பை பின்பற்றியே கட்டுகிறார்கள்...
ஆகத்து 6,9 ,ஆகிய தினங்களில் ஹிரோஷிமா,நாகசாகி நினைவின் வலியை உலகம் பகிந்து கொள்ளும் வேளையில்,அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........கட்டும் அதே கட்டிட அமைப்பை போன்று அணுஉலைகள் கட்டி வருகிறோம்.
கூடங்குளம் ''அணுஉலை'' அணு ஆயுதமற்ற உலகிற்கான '''அமைதி நினைவகமாக'' மாற வேண்டும் என்பதே அமைதி விரும்பும் அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும்.

Thursday, June 28, 2012


The Kalka-Shimla toy train - Himalayan Queen - has become the first in the country to have coaches operating on solar-based power system.


Each coach has been fitted with a 100-wattsolar panel at a cost of Rs 1.25 lakh, enabling the coaches to run for two days without the sun and make two trips to Shimla. The railways will also earn carbon credits through this green initiative.


The 96km Kalka-Shimla track is on the heritage list of UNESCO. The train passes through 102 tunnels and 864 bridges is considered as an engineering marvel.


Railway authorities initially conducted a trial run by using solar panels on the toy train running on the Pathankot-Jogindernagar track. 

Based on its success, all seven coaches of the Himalayan Queen were fitted with solar panels, railways officials said. After switching over to the solar system, each coach has become lighter by 500kg. It has also reduced the need for frequent maintenance.




"புகை ஒற்றன்' நூல் வெளியீடு

First Published : 26 Jun 2012 10:32:34 AM IST



விருத்தாசலம், ஜூன் 25: விருத்தாசலத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணிமுத்தாறு மக்கள் மன்றம் சார்பில் கவிஞர் இளங்கோவன் எழுதிய "புகை ஒற்றன்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இதில் மணிமுத்தாறு மக்கள் மன்ற சிறப்புத் தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் அறிவுமதி நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் கவுதமன், நடிகை இன்பநிலா, திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீரபாண்டியன், ரமேஷ் கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் தங்க. ஆசைத்தம்பி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


நிகழ்ச்சியில் வேப்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரி வரவேற்றார். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.பழமலய் தலைமை ஏற்றார். நீதிபதி ப.உ.செம்மல் கருத்துரை வழங்கினார்.


எழுத்தாளர்கள் வே.சபாநாயகம், கோ.தெய்வசிகாமணி, இமயம், கலைச்செல்வி, ரத்தின.புகழேந்தி, கண்மணி குணசேகரன், செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் சி.சுந்தரபாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். இளங்குமரன் நன்றி கூறினார்.
www.dinamnai.com.
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=619106&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D.

Tuesday, June 19, 2012

குங்குமம் ...25/06/2012.









Ours Green Book fair demand....
expressed through The New Indian Express.











இரஞ்சன் குடி கோட்டை ....
பெரம்பலூர் மாவட்டம்.

நன்றி ;தினமணி...


வரலாற்றின் நினைவாய் வீட்டில் இருந்த ஓர் ஓவியம் ஒன்று உருக்குலைந்து போனது போன்று இருக்கிறது ரஞ்சன்குடி கோட்டை.இந்த ஊரை 'நஞ்சன் குடி' என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.சென்னையிலிருந்து  செல்லும் போது வலதுபுறத்தில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் (NH-45) இருக்கிறது.பெரம்பலுரிலிருந்து 17  கி.மீ
வடக்காகவும்,இராமநத்தம்(தொழுதூர்)தெற்காக 8 கி.மீ. உள்ளது.பதினேழாம் நூற்றாண்டில்,'கருநாடகா நவாப்' பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவரால் கட்டப்பட்டது. 

மிக அழகாக வெட்டப்பட்ட கற்களை கொண்டு இதன் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.இக்கோட்டை மதில்கள் மூன்று அடுக்குகள் கொண்ட சுவர்களாக வெவ்வேறு உயரத்தில் உள்ளது.மேலிருந்து பார்க்கும் போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும்.கோட்டை வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஓட்டி அகழி இருக்கிறது,அகழிக்கு தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டு வரப்படுகிறது.  


அகழி நிறைந்த பின்னர் நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்பிடிப்பு ஒன்றில் சேகரமாகிறது.இவ்வகழியில் பாதுகாப்பு கருதி முன்னர் முதலைகள் விடப்படிருக்கவேண்டும்.இக் கோட்டையின் உள்ளே இரண்டு மசூதிகள் இருக்கின்றது,மேலே ஒன்றும்,கீழாகாக ஒன்றும் உள்ளது,இதில் கீழே உள்ள மசூதியில் இப்போதும் வழிபாடு நடந்து வருகின்றது.ரஞ்சன்குடி கோட்டை கட்டிடகலையில் இரு சிறப்பான இடத்தை பெறுகின்றது.படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் பேட்டை என்று குறிப்பிடப்படும் இடம் முன்பு போர் புரிந்த இடமாக இருக்க வேண்டும்.1751 ஆண்டு நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில்,இந்த கோட்டை ஒரு முதன்மையான பங்கு பெறுகின்றது.ஆங்கிலேயர்களுக்கும்,பிரான்சு நாட்டவருக்கும் தொடர்ந்து நடைப்பெற்ற போரில் இக்கோட்டையை கைப்பற்றுவது தான் வெற்றியை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருந்தது.ஆரம்பப்போரில் பிரான்சு வெற்றி பெற்றாலும்,பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர்.

உச்சி மேல் இருக்கும் பகுதி 'கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது.
தூரத்தில் இருந்து வரும் எதிரியை கவனிக்கவும்,பீரங்கி போன்ற ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும்,சுவர்களில் துளைகள் இடப்பட்டு உள்ளது.வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால்,சுவற்றின் துளைகள் வழியே தம்மை குறி வைப்பது எதிரிக்கு தெரியாது.  

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளது.இந்த குளத்து நீர் நவாபுகள் குளிக்கவோ,குடிக்கவோ பயன் பெற்றிருக்க வேண்டும்.இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள் ,போர் கருவிகள் சேமிக்கும் இடங்கள்,குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.ஆண்களையும்,பெண்களையும் இறக்கும் வரை சிறை வைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் .பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாலங்கள்
இருக்கின்றன. திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால்,அதற்க்கு தேவையான படைக்கலங்கள் இங்கிருந்து தான் சென்றிருக்க வேண்டும்.இவ்வாறு வரலாற்றில்,வரலாற்றின் போக்கை தீர் மானிக்கின்ற ஒரு இடமாக இருந்திருக்கின்றது ரஞ்சன்குடி கோட்டை.

இப்போது கோட்டையின் வெளியே மக்கள் குடி இருக்கும் ஊர் இருக்கின்றது.மீதி யாவும் பசுமை போர்த்திய வயல் வெளிகள் காணப்படுகிறது.இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்களில் இந்த நிறுவனத்தால் மிக மோசமாக பராமரிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இது தான் இருக்கும் என்று எண்ணுகிறோம்.இந்த இடத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இங்கே இல்லை.தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பலகை கூட சேதமடைந்து பொய் உள்ளது.

அண்மையில் தான் முன்னாள் முதல்வர் கதை வசனத்தில் உருவான "பொன்னர் சங்கர்" என்ற திரை ப்படத்திற்க்கான அரங்க வேலைகள் முதல்வரின் ஆலோசனைப்படி நடை பெற்றதாக சொல்லப்பட்டது.இது முடிந்த பின்னராவது இதற்கு ஒரு விடிவு காலம் வருமென்று இப்பகுதி மக்கள் எதிர் பார்த் தார்கள்,இதுவரை எதுவும் இல்லை.தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளதால் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்க வாய்ப்புள்ளது.இது ஒரு வேலூர்,திருமயம் கோட்டை போன்று விளக்கம் பெற வேண்டிய ஒன்று.பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சிதிலம் மடைந்து வருவது வருத்தமுடைய ஒன்று.

 இந்திய தொல்பொருள் ஆய்வு 
நிறுவனம்,தமிழ்நாடு சுற்றுலா கழகம்,மாவட்ட நிருவாகம் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் அந்த கிராம மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் கோபமாகவும்,குரலாகவும் உள்ளது.வேலுருக்கு ஒரு கோட்டை போன்றும்,திருச்சிராப்பள்ளிக்கு ஒரு மலைகோட்டை போன்றும்,பெரம்பலூருக்கு இந்த ரஞ்சன் குடி கோட்டை சிறப்பு சேர்க்க கூடிய ஒன்று.சிறப்பு சேர்க்குமா இந்த அதிகார வர்க்கம் ? 

      வாழ்க்கைத் துணை நலம் ஏற்பு விழா.............06/05/2012.












Sunday, February 26, 2012

பசுமை புத்தக காட்சி சென்னையில் இருந்து....

''பசுமை நிகழ்வுகள்''....அறிவு சார்ந்த ''புத்தக கட்சியில் இருந்து தொடங்கட்டும்''
தொடர் இயக்கமாய்......

பசுமை புத்தக காட்சி சென்னையில் இருந்து....


தினமணி -சென்னை பதிப்பு-ஜனவரி-12-2012.

புதிய பொங்கல் கொள்கை ............2012.

புதிய பொங்கல் கொள்கை ..................தினமணி -சென்னை பதிப்பு.2012.

Monday, February 6, 2012

சூரிய மின்சாரத்திற்கு மாறிய ''அம்பத்தூர்-உப்புக்காரமேடு'' பகுதி மக்கள், 20 ஆண்டு கால இருளில் இருந்து மீட்ட மா-லெ(கம்யூ) தோழர்கள்...




சென்னை-அம்பத்தூர் ரயில் மேம்பாலத்துக்கு அருகில் உப்புக்காரமேடு என்று ஒரு பகுதி சாலையோரமாகவே இருக்கிறது.முன்பொருகாலத்தில் இங்கே தான் உப்பு விற்கப்பட்டதாம்,அதனால் இதற்கு "உப்புக்காரமேடு"என்று பெயர்ககாரணம்  கூறினார்கள்.இங்கே 60 குடும்பங்கள் 50 வீடுகள் உள்ளது.அனைவருமே அன்றாடம் அருகில் உள்ள 
பகுதிக்கு ஏதோ ஒரு கூலி வேலைக்கே செல்கிறார்கள்.அனைத்து வயது மக்களும் இங்கே 20 ஆண்டுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இந்த இடம் ரயில் துறையினருக்கு சொந்தமானதாகும்.எனவே இவர்களுக்கு "பட்டா" எதுவும் கிடையாது.இதற்கு நேர் எதிரேவும் ரயில் துறையினருக்கு  சொந்தமான இடம் இருக்கிறது,இப்பகுதியில் ஓரளவுக்கு வசதி கொண்ட மேட்டு குடியினரே வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைத்து வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். 

உப்புக்காரமேடு'' பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை" வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால்,அடிப்படை வசதிகள் வேறு எதுவும் கிடையாது.மின்சாரம் இல்லாத ஒரு இருண்ட பகுதியாகவே 20 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.சிங்கார' ஒளிரும் சென்னையில் இப்படி ஒரு குடியிருப்பு இருப்பது மிக வியப்பாகவே இருக்கிறது.
குடிக்க குடிநீருக்கு ஒரு கைக்குழாய்' மட்டும் உண்டு.இவர்களில் பள்ளிசெல்லும் பிள்ளைகளும் உள்ளனர்.


வழக்கமாக இவர்கள் குடிமக்களாக கருதப்படாமல்,வாக்களர்களகவே' கருதப்பட்டு வந்துள்ளனர்.சூரியன் உதித்தும்,இலை மலர்ந்தும்,இங்கு இருள் மறையவே இல்லை.
அம்பத்தூர் நகராட்சிக்கு நடந்தார்கள்.காண்போரை எல்லாம் பார்த்து கெஞ்சினார்கள் ஏதும் நடக்கவே இல்லை.பட்டா இல்லை என்ற காரணத்தால்,காலம் கடத்தப்பட்டே
வந்தது,ஆனால் இது போன்றே தங்கி இருக்கும் எதிர் பகுதியில் அனைத்து வசதிகள் கண்டு,இவர்கள் புரியாமலே புலம்பி வந்தனர்.சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.முதியவர்கள்,பிணி கொண்டவர்கள்,இதையும் இழந்து விட்டால் வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் அங்கயே வாழ்ந்து வந்தனர்.



இந்த நேரத்தில் தான்..இ கம்யு  (மா லெ),தோழர்களின்,தொடர்பால்,ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.இவர்களும் போராட்டம், என்று எல்லா வகையிலும் முட்டி,மோதி பார்த்து வந்தனர்.அம்பத்தூர் பகுதி தோழர்கள் தொடர்ந்து பலரையும் சந்தித்து தீர்வுக்காக போராடி வந்தனர்.கடைசியில் ஒரு தனி ஒரு நிறுவனத்தின்  உதவியோடு,அந்த பகுதிக்கும்,அனைத்து வீட்டுக்கும் ''சூரிய ஒளி'' மின்சாரம் தரப்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக இது கிடைத்துள்ளது.


இவர்களுக்கு மின்சாரம் இல்லாத போதும்,கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி இப்போதும் இயக்கப்படாத சோகத்தில் இருக்கின்றனர்.அரசு மின்சாரம் கொடுக்காத இந்த சூழலில்,மாற்று முறையில் தீர்வு கண்டது நமக்குள் பல சிந்தனைகளை உருவாக்குகிறது.அரசின் பாரா முகம்,எப்போது இது போன்ற ஏழைகளை நோக்கி திரும்பும்,என்று தெரியவில்லை.அரசிடம் இருந்து அனைத்து அடிப்படை உதவிகளையும் பெற்று தந்தே தீருவது என்று 
முனைப்போடு செயல் படுகிறார்.''திருவள்ளுவர் மாவட்ட தலைமை பொறுப்பாளர் தோழர் மோகன் அவர்கள் .


அதே சமயம் சூரிய ஒளி கொண்டு ஏன்,மற்ற மின் பற்றாக்குறை பகுதிகளை ஒளிரச் செய்யக்கூடாது.அணு உலை தான் தீர்வு என்பதற்கு மாற்று பதில் சொல்ல வந்த உதாரணமாகவே நாம் பார்க்கிறோம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை வீட்டு வேலை செய்து காப்பாற்றி வரும் ஒரு மூத்த தாய்.
   
கால் முறிந்த நிலையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் ஒரு பெரியம்மாள்.