Monday, August 27, 2012

ஆன்மாவை அறுவடை செய்தபின்...





ஏரிப்பாசனத்தில் ஏகமாய் விளையும் நிலம்

இந்த மழையற்ற நாளிலும் 


வற்றாத கிணறு


எல்லாவிதத்திலும் உழவுக்கு ஏற்ற நிலம் 



அதனாலென்ன 



இதுவரை கதிர் விளைந்த நிலத்தில்



கட்டிடம் விளைய போகிறது




ஆன்மாவை அறுவடை 
செய்தபின்...









                   



''தக்கோலம்'' ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் .........



தக்கோலம்.இது வரலாறு கடந்து போன பாதையில் அமைந்திருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று.  இராட்டிரகூடர்களும்,சோழர்களும் போர்க்களம் கண்ட பகுதி.காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் இடையே அமைந்திருக்கிறது   தக்கோலம். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தன் பெயரில் ஒரு வரலாறை தாங்கி தங்கியிருக்கும் ஊர். 
இன்றும் நமக்கு அருகில் இருக்கிறது என்ற ஆவலில் ஒரு நாள் 
பயணமானோம்.அந்த ஊர் போகும் வரை அந்த ஊரை பற்றி சில பிம்பங்கள் இருந்ததது.ஆனால் அந்த ஊரில் வரலாற்று தடயமாக எதையும் நம்மால் காண முடியவில்லை.பெரும்பான்மையோரிடமிருந்து நமக்கான பதிலை,அடையாளங்களை தேடி பெற முடியவில்லை.இறுதியாக ஒரு ஓய்வு பெற்ற  ஆசிரியரிடமிருந்து மட்டுமே பதில் கிடைத்தது.கல்லும்,மணலும் கொண்ட மேட்டு பகுதி இருந்தது,அதுவும் இப்போது விவசாய நிலமாக மாறிவிட்டது என்றார்.பழமையான ஜலனாதீஸ் வரர் கோவிலை மட்டுமே பார்த்து வர முடிந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போர் நடந்த இடத்தில் இன்று ஒன்றும் இருக்க வாய்ப்பிலாவிட்டலும்,ஆயிரமாண்டுகள் அகவையுடைய ஊரினை,வரலாறில் எழுத்துக்களாய் படித்த ஊரை பார்த்த ஒரு மகிழ்வில் திரும்பினோம்.

கொஞ்சம் வரலாறு..........

தக்கோலப் பெரும் போர் கி.பி. 949ஆம் வருடம் வேலூர் மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்யர் தலைமையிலானமுதலாம் பராந்தக சோழரின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின.   மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில்  சோழ இளவரசர் இராஜாதித்யர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.



                                                 

Friday, August 24, 2012

இலுப்பை இலைப் படுக்கை!.................



இலுப்பை இலைப் படுக்கை!



யற்கையைக் காப்பதற்காக 'மழை - மண் - மரம் - மானுடம்’ என்ற அமைப்பை தனி ஒருவராய் நிறுவி தமிழகம் முழுதும் களப் பணியில் இயங்கிவருகிறார் இரமேசு கருப்பையா. இவர், தான் பிறந்து வளர்ந்த ஊரான ராமநத்தம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
’’கடலூர் மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் கடைக்கோடிக் கிராமம்தான் எங்கள் ஊர். சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிக்குச் செல்லும்போது, நீங்கள் எங்கள் ஊரைக் கடந்துதான் செல்ல முடியும். இங்கு இருக்கும் அழகான வெள்ளாற்றங்கரையின் வடகரையில்தான் எங்கள் ஊர் உள்ளது. வடகரையில் கடலூர் மாவட்டம், தென்கரையில் பெரம்பலூர் மாவட்டம் அமைந்து இருப்பது இதன்  சிறப்பு. ராமர் இந்த ஊரின் வழியாக சென்றதால்தான் ராமநத்தம் என்று பெயர் வந்தது என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. ஆனால், இந்தப் பெயரை தமிழ்ச் சொல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் நீர்ப் பிடிப்பும் நிலப்பிடிப்பும் உள்ள பகுதி என்று அர்த்தம் தெரியவந்தது.

புதிதாக நாம் குடியேறும் இடத்துக்கு அண்ணா நகர், பெரியார் நகர் என்று நாம் இன்று வைத்துக்கொண்டது போல இங்கு, குடியேறிய மக்கள் நத்தம் என்ற பெயருக்கு முன்னால் ராமன் என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே காலப்போக்கில் 'ராமநத்தம்’ ஆகிவிட்டது.
எங்கள் ஊரின் பெயர் ராமநத்தம் என்றாலும் தொழுதூர் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். ஏனெனில், இங்கு இருந்து மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தொழுதூர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஊராக இருந்தது. ஊரின் மேற்குப் பக்கம் மழை பெய்தால் மட்டுமே, எங்கள் ஊரின் வெள்ளாற்றில் தண்ணீர் ஓடும். மற்ற நேரங்களில் இருக்காது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது அதில் அடித்துக்கொண்டுவரும் வைக்கோல் போர், தென்னை, பனை மரங்கள் போன்றவற்றை வேடிக்கை பார்ப்பதில் எங்களுக்கு  அலாதி இன்பம்.  ஆற்றுப் பாலத்துக்கு அடியில் இருக்கும் நீர்த் தேக்கத்தின் வாய்க்கால்களில்தான் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் குளிப்போம்.  நீச்சல் பயிற்சியை விளையாட்டாகவே அனுபவித்த அந்தப் பருவங்கள் அழகானவை.

என்னுடைய இரண்டாவது கருப்பை என்று என் ஊரில் உள்ள இலுப்பைத் தோப்பைச் சொல்லலாம். உள்நோக்கும் முகமாக என்னை நானே பார்த்துக்கொண்டதும் என் சிந்தனைகளைக் கிளை பரப்பி வளர்த்துக் கொண்டதும் இங்குதான்.  சுமார் 150 மரங்களைக்கொண்ட இந்தத் தோப்பு வெள்ளாற்றங்கரையில் பசுமையையும் குளுமையையும் ஒருசேர அள்ளித்தரும். தேர்வுக் காலத்தில் எங்களின் படிப்பிடமும் இங்குதான். காலையில் எழுந்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வோம். படித்துக் களைப்பாகிவிட்டால் சருகுகளாகக் கிடக்கும் இலுப்பை இலைகளைப் பரப்பி படுக்கையைத் தயார் செய்து படுத்துவிடுவோம்.
தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் ஆற்றுக்குச் சென்று கைகளால் மணலைத் தோண்டினால் ஊற்று நீர் பொங்கி வரும். அந்தத் தண்ணீரைக் குடிப்போம். அமைதியான சூழலில் படிக்கவும் தூங்கவுமாக எங்கள் பால்யத்தைப் பசுமையாக வைத்து இருந்த இலுப்பைத் தோப்பு என் தாத்தாவுக்குச் சொந்தமானது. இங்கு இருக்கும் மரங்களின் வேர் முடிச்சுகள் என் தாத்தாவின் கைரேகைகள். எனக்குள் இயற்கை ஆர்வத்தை விதைத்தது இந்த இலுப்பைத் தோப்புதான். இப்போதும் ஊருக்கு வந்தால், காலையில் கண் விழிக்கும் இடம் இதுதான்.


அப்போது மோட்டல் என்று சொல்லக் கூடிய 'வழி உணவகம்’ முதன்முதலில் எங்கள் ஊரில்தான் ஆரம்பித்தார்கள். சாலையோர உணவு விடுதிகளை முதன்முதலில் பார்த்தபோது அதிசயத்துப்போனேன்.  இந்த  உணவு விடுதிகளால்தான் தொழுதூர்- ராமநத்தம் என்று  ஊர் இருப்பதே பலருக்குத் தெரியவந்தது.
எங்கள் மக்கள் நெல், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாலையில் கொட்டித்தான் நெற்கதிர் அடிப்பார்கள். ஆனால், இப்போது நொடிக்கு ஒரு வாகனம்  கடந்து செல்வதால், சாலையைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக எங்கள் ஊரில் இப்போது வந்து குடியேறிக் கொண்டு இருக்கிறார்கள். இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றிவிட்டார்கள். சாலையின் இருபுறமும் இருந்த புளியமரங்களை அழித்துவிட்டு சாலையின் நடுவில் செடிகள் நடுகிறது நம் அரசு. இந்த முரண்பாடுதான் என்னை முள்ளாய்த் தைக்கிறது. என் பால்யத்தில் புளிய மரங்களில் தொத்தித் திரிந்த குரங்குகள் இப்போது என்னவாயின என்றே தெரியவில்லை. புளிய மரத்தினை நம்பி வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று அழிந்துவிட்டன.
எங்கள் ஊரில்  வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம். அதனால், பிழைப்பைத்தேடி வெளிநாடு செல்பவர்கள் இங்கு அதிகம். இங்கு எட்டாவது படிக்கும் ஒவ்வொரு மாணவனும் வெளிநாட்டுக் கனவில்தான் படிக்கிறான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குறைந்தது பத்து பேராவது இங்கு இருந்து வெளிநாடு கிளம்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம் அல்ல... விவசாயம் செத்துவிட்டது என்று அர்த்தம்!
சந்திப்பு: ஜெ.முருகன்
படங்கள்: தேவராஜன்

Friday, August 17, 2012

குயிலின் குரல் இலக்கியமானது...........

               
பெரும்பாவலர் 'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' யாவரும் அறிந்ததே.இதை புதுவையில் இருக்கும் பொது தான் இயற்றினார்.ஒரு படைப்பு உருவாவதற்கு சூழல் பெரும்பங்கு ஆற்றுகிறது.அது நமது பாவலரின் படைப்புக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.    'பாரதியார்' எழுதிய 'குயில் பாட்டு' உருவானதே குயில் தோப்பில் தான்.
அந்த குயில் தோப்பு,புதுவையின் புறப்பகுதியாக இருந்த கருவடிக்குப்பம் ஆகும்.தற்போது கிழக்கு கடற்கரை சாலை (புறவழிச் சாலையில்) உள்ளது.இப்போது அங்கே குயில் தோப்பு இல்லை.சித்தர்; சுவாமி சித்தானந்தா சுவாமிகளின் வளாகத்தில் தான் முன்னர் குயில் தோப்பு இருந்தது.இப்போது பாரதியார் இயற்றிய அவ்விடத்திற்கு நினைவாக ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது.அங்கே சுவாமி சித்தானந்தா சுவாமி களை வழிபட வருபவர்கள்,எத்தனை பேருக்கு இது தெரியும் என தெரியவில்லை.

   அன்று  குயில்கள் இருந்தன,தோப்பு இருந்தது.ஒரே வகையான மரங்களின் தொகுப்பிற்குத்தான் தோப்பு என்று மரங்களின் பெயர் வரும்.
  பறவைகளின் பெயரில் தோப்பு அமைந்திருக்குமானால்,அன்று அது எத்தகைய தோப்பாக இருந்திருக்கும்.
 அது பாரதியை வரவேற்றிருக்கிறது.தன் பெயரில் கவி பாட'' வைத்திருக்கிறது.இன்று குயில் தோப்பும் இல்லை .குயில்களும் இல்லை.
 பெரும் குரலில் பாடிய பாரதியும் இல்லை.ஆனாலும் குயில் பாட்டு,தமிழின் குரலாக ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.  
குயிலின் குரல் இலக்கியமானது........... 

வெள்ளை எருக்கு....


                                
எருக்கஞ் செடிகளை  நாம் பரவலாக எல்லா இடத்திலும் பார்க்க கூடும்.ஆனால் அவை எல்லாம் நீல வண்ண மலர்களை கொண்டதாக இருக்கும்.வெள்ளை நிறத்தில் பூக்க கூடிய ''வெள்-எருக்கினை''
பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று.இதனை ''திருமாற்பேறு'' என்னும் ஊரில் கோவிலுக்கு வெளியே பார்க்க முடிந்தது.இந்த வெள் எருக்கு மலர்கள் கொண்டுதான் கடவுளர்களுக்கு மாலைகள் செய்வார்களாம்.இதன் மருத்துவ பலன்கள் முழுமையாக பயன்படுதப்பட்டாதா என்று தெரியவில்லை.நீல வண்ண மலர்களை போல்,இது 
எளிதாக கிடைப்பதில்லை என அறிகிறோம்.இல்லை இது அழிந்து வருகிறதா என தெரிய வில்லை.வழக்கம் போல அழிந்தபின் வருந்துவோம்.இல்லை யாரோ ஒரு அமெரிக்ககாரன் ''பட்டா'' போட்டு ''பதிவு செய்து ,பயன்படுத்தகூடாது என்று  சொன்னால் மட்டுமே பொங்கி அழுவோம்.

 
                                                                                         

காக்காவுக்கு சோறு வச்சிங்களே,தண்ணீர் வச்சிங்களா......''பாப்பா கேட்ட காக்க கேள்வி'.


''பாப்பா கேட்ட காக்க கேள்வி'
                                       
ஏதோ ஒரு பண்டிகை நாள்.அன்று ஊருக்கு செல்லாமல் சென்னையிலயே தங்கி விட்ட நண்பர்களை நண்பகல் விருந்துக்கு அழைத்து இருந்தார் நண்பர்.அவருக்கு சென்னையே பிறப்பிடம்.சென்றிருந்த நண்பர்களில் ஒருவர் குழந்தையோடு வந்திருந்தார்.எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம்.உள்ளே ''படையல்'' வேலை நடந்து கொண்டிருந்தது.எல்லாம் முடிந்த பின்னர்,சாப்பிடுவதற்கு அமர்ந்தோம்.இலை போட்டு தண்ணீர் வைத்தாகிவிட்டது .
அந்த வீட்டை சேர்ந்த நண்பரின் அம்மா,எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தாச்சு,காக்காவுக்கு சோறு வைக்கலையே என்றார்.அட.. டா.. என்ற படி,அந்த வீட்டு நண்பர்,கொஞ்சம் சோறு எடுத்துக்கொண்டு  வீட்டின் மாடிக்கு சென்று விட்டார் .பின்னர் வந்தவர் ,அப்பாடா..நல்ல வேளை நாம் சாப்பிடுமுன் காக்காவுக்கு சோறு வச்சாச்சு என்றார்.
அப்போது அந்த குழந்தை கேட்டது,
காக்காவுக்கு நீங்க சோறு வச்சிங்களே , தண்ணீர் வச்சிங்களா....?என்று ...எல்லோருக்கும் அது புதுமையாகவும்,மழலைத்தனமாகவும் இருந்ததை ரசித்தனர்.உண்மையில் 
அதில் நடைமுறை உண்மை இருந்தததை உணர முடிந்தது.

நாம் என்றாவது இது குறித்து யோசித்தது உண்டா?சோறு வைக்கும் நாம் ஏன் தண்ணீர் வைப்பதில்லை?இந்த ''கட்டிட காட்டினில்''நதியை தேடி எங்க போகும்.
அப்போது தான் நினைவுக்கு வந்தது. நண்பர் ''சதீஷ் முத்து கோபால்'' சிட்டு குருவிக்கு தண்ணீர் வையுங்கள்.கம்பு தானியங்களை  தூவுங்கள் என்றபடி அறிவுறுத்திவருவார்.அதை எப்படி அவர் தனது வீட்டில் செய்து வருகிறார் என்பது பற்றியும் புகைப்படம் இட்டு வருவார்.ஆமாம் இப்போது நாம் யாரும் சிறு தானியங்களை பயிர் இடுவதில்லை.அப்போது அதன் உணவை தான் அதற்கு இடவேண்டும்.
அப்படி இருக்கையில் காக்காவுக்கு ஏன் சோறிட வேண்டும்.மத நம்பிக்கையின் படி முன்னோர்கள் காக்கையின் வடிவில் வந்து உண்பதாக நம்பினார்கள்.அதை தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக பட்டது. (இல்லாமலும் இருக்கலாம்) காக்கை,கழுகு ஆகியவற்றை  ''ஆகாயத் துப்புரவாளர்கள் ''என்று அழைப்பது உண்டு.ஏன் என்றால் 
இவை பெரும்பாலும் இறந்த உயிரினங்களை  உண்டு நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பெரும்பங்கு வைக்கிறது.இப்போது காக்கையை அழைப்பதன் நோக்கம் இதற்காகவும் இருக்கலாமா என்று எண்ண தோன்றுகிறது.

எது எப்படியோ ''பாப்பா கேட்ட காக்க கேள்வி'' நல்ல செயலை நோக்கி தள்ளியது.இனி காக்காவுக்கு சோறு வைக்கும் போது,இல்லை என்றானாலும்  தண்ணியாவது வைப்போம் எப்போதும்.    
         

Thursday, August 16, 2012

அலிப்பூர்,கான்பூர் .....திருமால்பூர்.



                                          

காஞ்சிபுரத்திலிருந்து ,அரக்கோணம் செல்லும் பாதையில் நண்பரோடு இருசக்கர பயணமாக சென்று கொண்டிருந்தோம்.நல்ல தமிழ் தாங்கிய பெயர் பலகைகளே கண்ணில் பட்டுக்கொண்டு வந்தது.ஒரு பெயர் பலகை ''திருமால்பூர்'' என்று கண்ணில் பட்டது.வட நாட்டில் பல ஊர் பெயர்களுக்கு அலிப்பூர்,கான்பூர் .  ''பூர்'' என்று முடிவதுண்டு.தமிழில் 'ஊர்'
என்றுதான் பெரும்பான்மை முடியும்.இப்படியாக பேசிக்கொண்டு செல்லும் போது,  ''ஊர்'' என்று மட்டுமே முடியவேண்டுமனால் ,திருப்பூரில் எப்படி ''பூர்'' என்று வந்தது என்றார் நண்பர்.ஆமாம் எப்படி வந்தது ..என்று பேசிக்கொண்டே கடந்தோம்.ஆனால் அந்தப்பேச்சை எங்களால் கடக்க முடியவில்லை.திடீரென்று நண்பரே சொன்னார் .யாராவது நம்மாளுங்க  
 'ராஜ்கபூர்,அனில் கபூர்'' என்று வடநாடு ரசிகசிகாமணிகள் யாராவது இந்த வேலையை செய்திருப்பார்கள் என்றார்.நடுவணரசு  புகைவண்டி பலகையிலும் அப்படியே இருந்தது.பொதுப்பணித்துறை 'திருமால்பூர்'ஏரி..என்றே குறிப்பிட்டு இருந்தது.
நாம் சென்ற வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.அட வாப்பா..இங்கிருந்து மூன்று கல் தொலைவு தான் சென்று பார்த்து விட்டு,திருமால் கோவிலையும் பார்த்து விட்டு வரலாம் என்றார்.சரி ''இவ்வளவு தூரம் வண்டி  விட்டோம்,இன்னும் கொஞ்சம் விடுவோம்'' என்று வண்டியை செலுத்தினோம்.  
அங்கே தான் அதிர்ச்சி காத்திருந்தது ..அந்த ஊரின் பெயர் ''திருமாற்பேறு'' ..அதாவது , திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.அதுதான் ''திருமாற்பேறு''-திருமால்பூர் என்று மாற்றிவிட்டான் தமிழன்.
அட விடப்பா..பேர் பெற்ற நம்ம தமிழன் யாரோ ''பார்'' மயக்கத்துல ''பேறு'' என்பதை ''பூர்''என்று எழுதிவிட்டான்.நல்ல வேளை அவன் திருமால் ''போர்''என்று எழுதாமல் விட்டானே என்று ''பொறுமல்''மூச்சு விட்டோம்.
                       
  

Friday, August 3, 2012

அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........Peace Pagodas.

                                      
இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதையே,சிறப்பாக நினைத்து வந்த அந்த இளமை கால வாழ்க்கையில் இருந்து விலகியே நின்றார்,Nichidatsu Fujii [1885-1985]
குருஜி என்று அழைக்கப்பட்ட இந்த வழிகாட்டி.
தீவீ ரமான துறவு வாழ்க்கையை பின்பற்றிவந்தவர் இவர் .
நாடுகளை கைப்பற்றி அடிமைபடுத்த முயன்று வரும் வேளையில்
தமது பாதை அமைதியை நடைமுறை படுத்துவதே என்று நடை பயில தொடங்கினர்.இவரது பாதை அமைதி பயணங்களே.கையில் ஒரு சிறிய பறையை தட்டிக்கொண்டே அமைதிக்கான வார்த்தைகளை ஒலித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.1931 இல் இந்தியா  வந்த இவர் காந்தியின் ,போராட்ட முறை பிடித்துப்போனதால் இந்தியாவோடு மிகுந்த நெருக்கம் காட்டினர்.தாம் சார்ந்து வாழும் புத்த மதமும் இந்தியாவில் தோன்றியது என்பதும் கூடுதலான ஈடுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.

அப்போது உலகையே போர் மேகங்கள் சூழ்ந்து,முதலாம் உலகப்போரும்,இரண்டாம் உலகப்போரும் உலுக்கி வந்தது.இதன் இறுதி கோர முகமாக
ஹிரோஷிமா,நாகசாகியில் ''அணு ஆயுதங்கள் '' தங்கள் அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டின.மனித சமூகத்தின் கொடும் முகத்தினை கண்டு உலகம் அதிர் உற்றது போன்றே தானும் அதிர்வுற்று நின்றார்.
உலகம் முழுக்க அமைதியை வலியுறுத்தி நினைவகங்கள் உருவாக்க,மதம், இனம் ,மொழி, நாடு கடந்து மக்கள் ஒன்று கூட ஒரு இடம் உருவாக்கினர்.இவர் தோற்றுவித்த புத்த வாழ்க்கை முறையின் பெயர் ஜப்பான் புத்த அமைப்பாகும்.(Buddhist religious order, Nipponzan Myohoji)




       


               

அவைதான் இந்த அமைதி நினைவகங்கள்.இவை உலகம முழுக்க இன்று கட்டப்பட்டு வரப்படுகிறது.
இவை முதன் முதலில் கட்டப்பட்டது ஹிரோஷிமா,நாகசாகியில் தான்.இந்த கட்டிடங்கள் இந்தியாவில் உள்ள ''சாஞ்சி'' புத்த நினைவிடத்தை போன்ற கட்டிட அமைப்பை பின்பற்றியே கட்டுகிறார்கள்...
ஆகத்து 6,9 ,ஆகிய தினங்களில் ஹிரோஷிமா,நாகசாகி நினைவின் வலியை உலகம் பகிந்து கொள்ளும் வேளையில்,அணு ஆயுதமற்ற உலகிற்கான ''அமைதி நினைவகங்கள்''..........கட்டும் அதே கட்டிட அமைப்பை போன்று அணுஉலைகள் கட்டி வருகிறோம்.
கூடங்குளம் ''அணுஉலை'' அணு ஆயுதமற்ற உலகிற்கான '''அமைதி நினைவகமாக'' மாற வேண்டும் என்பதே அமைதி விரும்பும் அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும்.