Tuesday, April 19, 2011

யானை எப்போது வீட்டுக்கு போகும் ..



யானை எத்தனை பெரியது என்றாய் ?

பார்த்ததும் 
எத்தகைய பெரியவர்களையும் 
சிறு குழந்தைகளாக்கி விடும் 
அத்தகைய பெரியது என்றேன் 


யானையின் தும்பிக்கை பார்த்த பின்பு 
ஆலமரத்திற்கு மட்டும் ஏன் 
இத்தனை தும்பிக்கைகள் என்றாய்
அப்போது தான் யோசித்தேன் 
யானையின் தும்பிக்கை 
அதற்கு வேரா ? விழுதா ? என்று ...


திருவிழா  பார்க்க ஊர் சென்றவர்கள் 
யானையை வியந்த படியே செல்கிறார்கள் 
தேர் பார்க்க சென்றதை மறந்து 


பெரிய கோயிலில் 
எந்த சாமி பிடித்தது என்றேன் 
யானை சாமி என்றாய்
ஏன் என்றேன் 
யானை தானே ஆசீர்வாதம் தந்தது என்கிறாய் 

யானை எப்போது வீட்டிற்கு போகும் என்றாய்
யானைக்கு வீடில்லை என்றேன் 
ஏன் ?வீட்டை தொலைத்து விட்டதா 



என்கிறாய்
இல்லை 
நாம் தான் 
அதன் "காட்டை" தொலைத்து விட்டோம் என்றேன்.. .

No comments:

Post a Comment