இலக்கணம் ;ஒற்று இரட்டித்தல்:
ஒற்றுமிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.
சோறு+பானை= சோறுப்பானை என்று எழுதுவதில்லை. சோற்றுப்பானை என்கிறோம். ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம். சோறு, ஆறு என்பவற்றுள் (ற்+உ=று) உள்ள "ற்' மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம். சோ+ற்+ற்+உ =(சோற்று)
ஒற்று இரட்டித்த பின் வலி (வல்லொற்று) மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது. அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும். அடையாறில் என்று எழுதுவது பிழை. ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம். ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே. மாடு+சாணம்= மாட்டுச்சாணம் என்கிறோம். வீடு + சோறு= வீட்டுச் சோறு என்கிறோம்.
இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.
தமிழ்நாடு+ அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ்நாடு அரசு ஏன் வந்தது? தமிழ்நாட்டரசு என்று மாற்றுக. கிணறு+தவளை= கிணற்றுத் தவளை. காடு +பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு+அரசு= நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?
கட்டுப்பாடு+அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க. மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க. நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.
நன்றி ;தினமணி கதிர் .03/10/2010;. கவிக்கோ ஞானச்செல்வன்
No comments:
Post a Comment